தரம்சாலா : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற்பெற பஞ்சாப் அணி 242 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டி என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பஞ்சாப் அணிக்காக அறிமுக வீரர் காவேரப்பா முதல் ஓவரை வீசினார்.

இந்த ஓவரின் 3வது பந்திலேயே விராட் கோலி கொடுத்த கேட்சை அஷுதோஷ் சர்மா கோட்டைவிட்டார். இதன்பின் உஷாரான விராட் கோலி அதிரடியை தொடங்கினார். ஆனால் மறுபக்கம் காவேரப்பா வீசிய 3வது ஓவரில் டூ பிளசிஸ் 9 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கோலி - பட்டிதர் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது.
ஹர்சல் படேல் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த பட்டிதர், ராகுல் சஹர் வீசிய 8வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி மிரட்டினார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 8.3 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. அதிரடியில் பொளந்து கட்டிய ரஜத் பட்டிதர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சாம் கரண் பவுலிங்கில் வெளியேறினார். அப்போது ஆர்சிபி அணியின் ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 119 ரன்களாக இருந்தது.
பின்னர் மழை குறுக்கிய சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் விராட் கோலி - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் கடக்க, 15 ஓவர்களில் ஆர்சிபி அணி 164 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் விராட் கோலி கியரை மாற்றினார். சாம் கரண் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்த விராட் கோலி சதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ரூசோவ் கையில் கேட்ச் கொடுத்து 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ராகுல் சஹர் வீசிய 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் - கேமரூன் க்ரீன் இணைந்து 21 ரன்களை விளாசினர். ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டிகே 7 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 4வது பந்தில் லோம்ரோர் டக் அவுட்டானார். கடைசி பதில் கேமரூன் க்ரீனும் ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது.