முல்லன்பூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 148 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கவில்லை. இதனால் புதிய கேப்டனாக சாம் கரண் களமிறங்கினார். அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின், பட்லர் ஆகியோர் காயம் காரணமாக விலக மஹாராஜ் மற்றும் தனுஷ் கோஷியன் சேர்க்கப்பட்டனர்.

இதன்பின் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் பேர்ஸ்டோவ் - அதர்வா டைய்டே தொடக்கம் கொடுத்தனர். அதர்வா டைய்டே அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய நிலையில், பஞ்சாப் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய 4வது ஓவரில் அதர்வா டைய்டே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் பேர்ஸ்டோவ் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பஞ்சாப் அணி 6 ஓவர்களில் வெறும் 38 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதையடுத்து சாஹல் மற்றும் மஹாராஜ் கூட்டணியை வைத்து சஞ்சு சாம்சன் அட்டாக் செய்தார். இதில் சாஹல் வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களிலும், மஹாராஜ் ஓவரில் பேர்ஸ்டோவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 8 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளாக இருந்தது. தொடர்ந்து சாம் கரணும் 6 ரன்களிலும், ஷஷாங்க் சிங் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியின் நிலை பரிதாபமாக மாறியது. பின்னர் ஜித்தேஷ் சர்மா - லிவிங்ஸ்டன் கூட்டணி இணைந்து சிறிது நேரம் தாக்கு பிடித்தது. இதனால் 16 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
அப்போது அதிரடிக்கு திரும்பிய ஜித்தேஷ் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து லிவிங்ஸ்டன் 21 ரன்களில் ரன் அவுட்டானார். கடைசி நேரத்தில் இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுதோஷ் சர்மா சில சிக்சர்களை விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் மஹாராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.