முல்லன்பூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்களும் சேர்த்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் மஹாராஜ் இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் தனுஷ் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பவர் பிளே ஓவர்களில் இருவருமே நிதானமாக விளையாடி தேவைக்கேற்ப சில பவுண்டரிகளை விளாசினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் தனுஷ் ஒரு பக்கம் ரன்கள் சேர்க்க முடியாமல் அதிகளவிலான டாட் பால்களை விளையாட தொடங்கினார்.
இதன்பின் லிவிங்ஸ்டன் பவுலிங்கில் தனுஷ் 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சாம்சன் களம் புகுந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்திருந்தது. அவர் லிவிங்ஸ்டன் பவுலிங்கில் சிக்ஸ், பவுண்டரி என்று அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து அட்டாக்கில் வந்த ரபாடா, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலை 39 ரன்களிலும், சஞ்சு சாம்சனை 18 ரன்களிலும் வீழ்த்தி அனுப்பி வைத்தார். இதனால் 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 58 ரன்கள் தேவையாக இருந்தது. இதன்பின் பஞ்சாப் அணியின் பவுலர்கள் சிக்கனமாக பவுலிங் செய்ய தொடங்கினார்கள். இது ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் பதற்றத்தை கொடுத்தது. இதன் காரணமாக அதிரடியாக விளையட முயன்ற ரியான் பராக் 23 ரன்களில் வெளியேற, இளம் வீரர் ஜுரெல் - ஹெட்மயர் கூட்டணி களத்தில் இருந்தது.
இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜுரெல், ஹர்சல் படேலை அட்டாக் செய்ய முயற்சித்து 6 ரன்களில் வெளியேறினார். இதன்பின் ரோவ்மன் பவல் களம் புகுந்தார். இதனிடையே ஹர்சல் படேல் ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவையாக இருந்தது. இதன்பின் சாம் கரண் வீசிய 19வது ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரிகள் அடிக்கப்பட, 3வது பந்தில் ரோவ்மன் பவல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த மஹாராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. ஆனால் 3வது பந்தில் ஹெட்மயர் சிக்ஸ் அடிக்க, 4வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் 5வது பந்தில் அர்ஷ்தீப் சிங் வீசிய டாஸாக வீச, அதை சிக்ஸ் அடித்து ஹெட்மயர் அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.