முல்லான்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் விலகிய நிலையில் அடுத்த கேப்டனாக துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு பதிலாக சாம் கர்ரன் கேப்டன் பதவியை ஏற்றார். இந்த விவகாரம் இந்திய ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடருக்கு முன் நடைபெற்ற கேப்டன்களுக்கான புகைப்பட நிகழ்வில் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா பங்கேற்றார். அப்போது ஜிதேஷ் சர்மா தான் துணை கேப்டன் அதனால் அவர் பங்கேற்றார் என பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் காயத்தால் ஆட முடியாத நிலையில் தற்காலிக கேப்டனாக ஜிதேஷ் சர்மா தான் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரே டாஸ் நிகழ்வில் பங்கேற்றார்.
இதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜிதேஷ் சர்மா துணை கேப்டன் இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், ஜிதேஷ் சர்மா புகைப்படம் எடுக்க மட்டுமே அனுப்பப்படுவார். ஆனால் போட்டிகளில் சாம் கர்ரன் தான் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணியை கிண்டல் செய்தும் வருகின்றனர். ஜிதேஷ் சர்மாவை கேப்டன்கள் புகைப்பட நிகழ்விற்கு அனுப்பி அவர் மனதில் ஆசையை விதைத்து விட்டு அவருக்கு கேப்டனாக செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை தட்டிப் பறிப்பது சரியல்ல என சிலர் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்தப் போட்டியில் ஷிகர் தவானுக்கு பதில் அதர்வா டைடே என்ற இளம் வீரர் ஷிகர் தவானுக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கினார். அவர் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஜிதேஷ் சர்மா 24 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் அதிக விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இம்பாக்ட் வீரராக அசுதோஷ் சர்மாவை களமிறக்கியது பஞ்சாப் அணி. அவர் 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அணியின் மானத்தை காப்பாற்றினார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.