முல்லன்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பேட்டிங்கில் சொதப்பியதே காரணம் என்று பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஹெட்மயர் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்து 8வது இடத்தில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பேசுகையில், இந்த பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கவும் இல்லை. சிறப்பாக முடிக்கவும் இல்லை. ஆனால் கடைசி நேரத்தில் வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். 150 ரன்களுக்கு அருகில் சென்று இலக்கை நிர்ணயித்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதேபோல் பவுலிங் சிறப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுப்போம் என்று நம்புகிறேன். புதிய மைதானம் என்பதால் பிட்சை புரிந்து கொள்ள வேண்டிய தேவை அதிகரிக்கிறது.
இந்த மைதானத்தில் முதல் போட்டியில் வென்றாலும், கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால் நிச்சயம் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கம்பேக் கொடுப்போம். கடந்த போட்டிகளில் எப்படி வென்றோமோ, அதேபோல் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.