முல்லன்பூர் : ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மோசமான ஆட்டம் தொடர்ந்து வரும் சூழலில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் ஐபிஎல் தொடரின் ஜெய்ஸ்வாலின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் வெறும் 63 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இருப்பினும் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்வது வருவதால், ராஜஸ்தான் அணி வெற்றிகளை பெற்று வருகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் தலா 3 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளனர். அதேபோல் பட்லர் தன் பங்கிற்கு ஒரு சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொஞ்சம் கூட ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இருப்பினும் ஜெய்ஸ்வால் மீது எந்த விமர்சனமும் கிடையாது. அவர் மீது கவனம் செலுத்த தேவையில்லை. ஆனாலும் அவர் ரன்கள் சேர்க்காமல் இருக்கும் போட்டிகளை நிச்சயம் குறித்து வைத்து கொள்கிறேன். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் பேட்டிங்கை பார்க்க ஆவலாக உள்ளேன். ஏனென்றால் ரபாடா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக எப்படி செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
அதனை சமாளித்தால், பட்லர் தான் இன்று கேம் சேஞ்சர். பட்லருக்கு பின் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் மீது கவனம் உள்ளது. ஏனென்றால் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு இந்த சீசனில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருப்பதாக நினைக்கிறேன். கடந்த போட்டியில் ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்திருந்தாலும், இந்த போட்டியில் கம்பேக் கொடுப்பார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.