சண்டிகர் : 140 கிமீ வேகத்தில் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை சரியாக பிடித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானை ஸ்டம்ப் செய்த கிளாசனின் திறமை ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 5 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 64 ரன்களை விளாசினார். அதேபோல் அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்களை சேர்த்தார்.

இதன்பின் 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 15 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி அசத்தினார்.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி கேப்டன் கம்மின்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் பவர் பிளே ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் அதிரடி வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவானின் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தியது வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே புவனேஷ்வர் குமார் விட்டுக் கொடுத்த நிலையில், அவரை அட்டாக் செய்ய ஷிகர் தவான் முடிவு செய்தார். இதனால் 2வது ஓவரின் முதல் பந்திலேயே டவுன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரி விளாசினார். தொடர்ந்து 5வது ஓவரையும் வீச புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலும் தவான் இறங்கி வந்து 2 ரன்கள் சேர்க்க, உடனடியாக விக்கெட் கீப்பர் கிளாசன் ஸ்டம்பிற்கு அருகில் கொண்டு வரப்பட்டார். இதனால் ஷிகர் தவான் டவுன் தி டிராக் இறங்கி வர தயங்குவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் கிளாசனை பற்றி கவலைப்படாமல் புவனேஷ்வர் குமார் வீசிய 4வது பந்தில் ஷிகர் தவான் இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். 140 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து ஷிகர் தவானை ஏமாற்றி கடக்க, அது கிளாசனின் கைகளில் பிடிபட்டது. பந்தை பிடித்த வேகத்திலேயே உடனடியாக ஷிகர் தவானை ஸ்டம்பிங் செய்து கிளாசன் வீழ்த்தினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.