முல்லான்பூர் : சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்த போது கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேல் பவுண்டரி கோட்டுக்கு அருகே ஒரு கேட்ச்சை நழுவ விட்டார். அது சிக்ஸராக மாறியது. இந்த நிலையில் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணமே ஹர்ஷல் பட்டேல் நழுவ விட்ட அந்த கேட்ச் தான் என பஞ்சாப் அணிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களும் கொந்தளித்து போயுள்ளனர்.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட்களை இழந்த போதும் 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. 20வது ஓவரின் கடைசி பந்தில் தான் அந்த திருப்புமுனை சம்பவம் நடந்தது. 19.5வது ஓவரில் 8வது விக்கெட்டை இழந்தது ஹைதராபாத் அணி. அந்த அணியின் கடைசி பேட்ஸ்மேனாக ஜெயதேவ் உனட்கட் களமிறங்கினார்.
அவர் 20வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸராக அடிக்க முயன்றார். பந்து பறந்து சென்று பவுண்டரி கோட்டுக்கு அருகே இருந்த ஹர்ஷல் பட்டேல் கைகளுக்கு சென்றது. ஆனால், பந்து வரும் பாதையை கணிக்கத் தவறிய ஹர்ஷல் சில அடி தூரம் முன்பே பந்தை பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவர் கைகளில் பட்டு எகிறி சிக்ஸராக மாறியது. ஒருவேளை அவர் பந்தை கீழ் புறமாக தட்டி விட்டு இருந்தால் கூட அது ஃபோராகவோ அல்லது ஒன்று, இரண்டு ரன்களுடனோ முடிந்திருக்கும்.
இந்த தவறு நடந்த போது கூடுதல் ரன்கள் போனதே என்று தான் பஞ்சாப் கிங்ஸ் அணி நினைத்தது. ஆனால், அந்த அணியின் சேஸிங்கில் கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அசுதோஷ் சர்மா - ஷஷான்க் சிங் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 26 ரன்கள் கிடைத்தது. வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.
ஒருவேளை ஹர்ஷல் பட்டேல் அந்த கேட்ச்சை பிடித்து இருந்தாலோ, சிக்ஸ் போவதை தடுத்து இருந்தாலோ இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கும். அவர் முதல் இன்னிங்க்ஸின் கடைசி பந்தில் செய்த தவறு, பஞ்சாப் அணியின் வெற்றியை தட்டிப் பறித்து இருக்கிறது.