முல்லான்பூர் : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்களை விரைவாக இழந்து தவித்த நிலையில் நிதிஷ் ரெட்டி என்ற இளம் வீரர் தன் அதிரடி ஆட்டத்தால் போட்டியை மாற்றினார்.
ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் 21 ரன்களிலும், அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். ஐடன் மார்கிரம் மூன்றாம் வரிசையில் களமிறங்கி டக் அவுட் ஆனார். நான்காம் வரிசையில் இறங்கிய நிதிஷ் ரெட்டி விக்கெட் வீழ்ச்சியை அடுத்து நிதானமாக ஆடினார்.

அவருக்கு பின் வந்த ராகுல் திரிபாதி 11, கிளாசன் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி தன் முதல் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால், அடுத்த 19 பந்துகளில் வெறியாட்டம் ஆடத் துவங்கினார். சிக்ஸர் மழை பொழிந்த அவர் கடைசி 19 பந்துகளில் மட்டும் 5 சிக்ஸ், 3 ஃபோர் அடித்து இருந்தார். நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதே போல ஷாபாஸ் அஹ்மத் கடைசி ஓவர்களில் 7 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த சன்ரைசர்ஸ் அணி 182 ரன்கள் குவித்தது. உள்ளூர் வீரரான நிதிஷ் ரெட்டியின் அபார ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணியால் சர்வதேச வீரர்களை தடுத்து விக்கெட் வீழ்த்த முடிந்தது. ஆனால், நிதிஷ் ரெட்டியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதன் பின் சேஸிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்து, பின்னர் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆல் - ரவுண்டரான நிதிஷ், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங்கில் காப்பாற்றிய நிதிஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.