மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுக்கான புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இது ஒரு வகையில் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றி இருக்கிறது.
2008 முதல் 2021 வரையிலான ஐபிஎல் தொடர்களின் லீக் சுற்றின் முடிவில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் நான்கு அணிகள் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தன. எட்டு போட்டிகளில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி என்ற நிலை அப்போது இருந்தது.

ஆனால், 2022 முதல் பத்து ஐபிஎல் அணிகள் தொடரில் பங்கேற்று வருகின்றன. ஆனால், ஒட்டுமொத்த போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் கூட ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் தான் பங்கேற்று வருகின்றன. ஆனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பெற்ற ஐபிஎல் அணிகளில் ஒரு அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. மற்ற மூன்று அணிகளில் ஒரு அணி 10 வெற்றிகளையும், இரண்டு அணிகள் 9 வெற்றிகளையும் பெற்று இருந்தன.
அதே போல, 2023 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பெற்ற ஐபிஎல் அணிகளில் ஒரு அணி 10 வெற்றிகள் பெற்று இருந்தது. மற்ற மூன்று அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்று இருந்தன. இதை வைத்துப் பார்த்தால் 2024 ஐபிஎல் தொடரிலும் 8 வெற்றிகள் பெறும் அணிகளே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே ஒரு வெற்றி கூட பெறாமல் மூன்று தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 11 லீக் போட்டிகள் உள்ளன.
அந்த 11 லீக் போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஐபிஎல் தொடரில் அது மிகக் கடினமான காரியமாகும். நல்ல அணி அமைந்தால் மட்டுமே அது போன்ற அசாதாரணமான விஷயத்தை செய்யலாம். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. பும்ராவைத் தவிர அந்த அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர் இல்லை. ஜெரால்ட் கோட்ஸி மற்றும் மகாபா ஆகியோர் இன்னும் இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவில்லை.
எனவே, இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக மாறி உள்ளது.