ராய்ப்பூர் : நீண்ட ஓய்வுக்கு பின் ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா சதம் விளாசி தரமான சம்பவத்தை செய்துள்ளார்.
இந்திய அணிக்காக 18 வயதிலேயே அறிமுகமான பிரித்வி ஷா, அதன்பின் பேட்டிங் ஃபார்ம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதேபோல் பவுன்சர் பிரச்சனை, ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள திணறியதும் இந்திய அணியில் இருந்து வெளியேறியதற்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து ஊக்க மருந்து சர்ச்சையால் தடை, ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங், தியோதர் டிராபி தோல்வி என்று பிரித்வி ஷா கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது.

இந்த நிலையில் திடீரென இங்கிலாந்தில் நடந்த கவுண்டி கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் விளையாட பிரித்வி ஷா புறப்பட்டார். இந்திய மண்ணிலேயே சொதப்பிய பிரித்வி ஷா, இங்கிலாந்து மண்ணில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக ஆடிய அவர் 153 பந்துகளில் 28 பவுண்டரி, 11 சிக்ஸ் உட்பட 244 ரன்களை விளாசி சாதனை படைத்தார். அதன்பின்னரும் மிரட்டலான ஆட்டத்தை ஆடிய பிரித்வி ஷாவுக்கு திடீரென ஃபீல்டிங் செய்யும் போது காலில் காயம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 மாதங்களாக மருத்துவ சிகிச்சை, ஓய்வு என்று பிரித்வி ஷா இருந்து வந்தார். அவ்வப்போது என்சிஏவுக்கு சென்று ஃபிட்னஸ் பயிற்சி மற்றும் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் முழு ஃபிட்னஸையும் எட்டிய பிரித்வி ஷா, ரஞ்சி டிராபி தொடரில் சட்டீஸ்கர் அணிக்கு எதிராக இன்று தொடங்கிய ஆட்டத்தில் மும்பை அணிக்காக களமிறங்கினார். தொடக்கம் முதலே தனது பாணியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியில் பொளந்து கட்டினார்.
சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா கம்பேக் போட்டியிலேயே சதம் அடிக்க, ஓய்வறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். முதல்தர கிரிக்கெட்டில் பிரித்வி ஷா அடிக்கும் 13வது சதம் இதுவாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 185 பந்துகளில் 18 ஃபோர்ஸ், 3 சிக்ஸ் உட்பட 159 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவரின் அதிரடியாக ஆட்டம் காரணமாக முதல் நாளிலேயே மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களை குவித்துள்ளது. பிரித்வி ஷா மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.