ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இளம் வீரரை தேவையில்லாமல் திட்டிய சம்பவம் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் டாப் 3 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து களத்திற்கு வந்த ரியான் பராக் அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்.

ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாச, அந்த அணி ஐந்து விக்கெட்டு இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. டெல்லி அணியும் அதிரடி வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி தொடர்ந்து இருந்து வந்தது.
குறிப்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி வந்தார். பவுண்டரி, சிக்சர் என ராஜஸ்தான் அணியை டேவிட் வாரர்னர் மிரட்டினார். இந்த நிலையில் டேவிட் வார்னரை ரன் அவுட் செய்ய அஸ்வினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அஸ்வின் வீசிய பந்தில் டேவிட் வார்னர், பக்கத்திலேயே அடித்து விட்டு ரன் ஓட முயன்றார்.
அப்போது பந்தை ஜெய்ஸ்வால் தடுத்து அஸ்வினிடம் எறிந்தார். ஆனால் அஸ்வின் அந்த பந்தை பிடிக்க தவறிவிட்டார். இதன் மூலம் வார்னரை ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு பறிபோனது. இதில் முழுக்க முழுக்க தவறு அஸ்வின் மீதுதான் இருந்தது. ஆனால் அஸ்வின் தன் மீதான தவறை மறைப்பதற்காக இளம் வீரர் ஜெய்ஸ்வாலை பிடித்து கத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெய்ஸ்வால் அப்படியே உறைந்து போய் நின்றார். எப்போதுமே அஸ்வின் இளம் வீரர்கள் மீது அவ்வளவு மரியாதையும் அன்பும் வைத்திருப்பார். குறிப்பாக ஜெய்ஸ்வாலை தம்பி என்று தான் அழைப்பார். அவரும் அண்ணா அண்ணா என்று அழைத்த வீடியோக்கள் எல்லாம் இன்னும் சமூக வலைத்தளத்தில் இருக்கிறது. இப்படி இருக்க அஸ்வின் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாதது என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து அஸ்வின் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.