பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை பெற்றிருக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 14 புள்ளிகளுடன் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த போட்டி வரும் மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆர்சிபி அணி முதலில் தோல்வியை தழுவினாலும், பிறகு தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது பிளே ஆப் பந்தயத்தில் இணைந்திருக்கிறது. இந்த சூழலில் மே 18ஆம் தேதி பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கோடை மழை தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் நல்ல முறையில் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக நேற்று டெல்லி, ஆர்சிபி அணிகள் மோதியபோது மழை குறுக்கிடவில்லை என்றாலும் போட்டி முடிவடைந்த பிறகு பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள பிரதீப் ஜான் மே 15ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று வரும் மே 18ஆம் தேதி சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பெங்களூரில் மோதும் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய அந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி என இரு அணிக்கும் ஒரு புள்ளிகள் கிடைக்கும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் பெறும். ஆர்சிபி 13 புள்ளிகளில் நிறைவு செய்யும். இந்த சூழலில் லக்னோ அணி டெல்லி அல்லது மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஒருவேளை லக்னோ இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே வெளியேறிவிடும். லக்னோ பிளே ஆப் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.