ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலியின் பேட்டிங்கை வஞ்சப் புகழ்ச்சியில் விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியானது. இதை அடுத்து விராட் கோலி ரசிகர்கள் ராஜஸ்தான் அணிக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இருந்தார் அவர். துவக்க வீரராக இறங்கி கடைசி பந்து வரை களத்தில் நின்றார் கோலி. ஆனால், பெங்களூரு அணியின் ஸ்கோர் 183 என்ற அளவிலேயே இருந்தது.

ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்பட்ட நிலையில் அதை நோக்கி பெங்களூரு அணியின் பேட்டிங் அமையவில்லை. விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 157ஆக இருந்தது. மற்ற பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர். விராட் கோலியின் பேட்டிங் நிதானமாக இருந்ததாகவும், 2024இல் டி20 போட்டிகள் முழுக்க முழுக்க அதிரடி பேட்டிங் என்பதாக மாறி விட்ட நிலையில் அவர் இன்னும் 15 ஆண்டுகள் பின்தங்கி நிதானமாக சதம் அடித்ததாக விமர்சனம் எழுந்தது.
அந்த விமர்சனம் எழுந்த அதே வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பதிவில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பாராட்டும் வகையில் "200க்கும் அதிகமாக ரன் குவிப்பது சாத்தியமான இந்த காலகட்டத்தில் 184 என்ற இலக்கு சாதகமானது" என குறிப்பிட்டு இருந்தது. அந்த பதிவின் கீழ் யுஸ்வேந்திர சாஹல் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது.
அதாவது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பெங்களூரு அணியை 200 ரன்கள் குவிக்க விடாமல் செய்து விட்டதாக அந்த பதிவு கூறி இருந்தது. ஆனால், அதற்கு மற்றொரு அர்த்தமும் உள்ளது. அதாவது 200 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தும் விராட் கோலியின் நிதான ஆட்டத்தால் பெங்களூரு அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது என சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போலவும் இருந்தது.
