மும்பை: ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் தேவ்தத் படிக்கல் மற்றும் லக்னோ அணிக்காக ஆடி வரும் ஆவேஷ் கான் இருவரும் டிரேட் முறையில் மாற்று அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் 10 அணிகளின் நிர்வாகங்களும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பட்டியல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அணிகளுக்கு இடையில் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான டிரேடிங் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே லக்னோ அணிக்காக ஆடி வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை அணிக்காக டிரேட் முறை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது இன்னும் 2 வீரர்கள் டிரேட் முறை மாற்று அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் இளம் வீரரான தேவ்தத் படிக்கல், லக்னோ அணிக்கு டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் லக்னோ அணியின் நட்சத்திர வீரரான ஆவேஷ் கான், டிரேட் முறையில் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மெகா ஏலத்தின் போது லக்னோ அணி நிர்வாகம் ஆவேஷ் கானை ரூ.10 கோடிக்கு போட்டிப்போட்டு வாங்கியது. அதேபோல் தேவ்தத் படிக்கலை ராஜஸ்தான் அணி ரூ.7.75 கோடிக்கு வாங்கியது. டாப் ஆர்டர் வீரரான படிக்கல் ராஜஸ்தான அணியில் மிடில் ஆர்டரில் ஆடி வந்தார். இதனால் மொத்தமாக கடந்த 2 சீசனில் 28 போட்டிகளில் விளையாடி 637 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதேபோல் ராஜஸ்தான் அணிக்கு பிரசித் கிருஷ்ணா, போல்ட் ஆகியோருடன் 3வது வேகப்பந்துவீச்சாளராஅக சந்தீப் சர்மா உள்ளார். இதனால் அவரது இடத்தில் ஆவேஷ் கான் ஆடினால் அந்த அணி கூடுதல் பலம்பெறும். இதனால் ராஜஸ்தான் அணிக்கு ஆவேஷ் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆனால் லக்னோ அணியை பொறுத்தவரை தேவ்தத் படிக்கல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், தீபக் ஹூடாவை அந்த அணி விடுவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் தொடரில் தீபக் ஹூடாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுத்தும் அவரால் ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.