மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கி இருக்கிறது. விளையாடிய மூன்று போட்டியிலுமே அந்த அணி தோல்வியை தழுவி தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.
கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவதில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா எங்கு சென்றாலும் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஹர்திக் பாண்டியாவின் உத்வேகம் மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் மும்பை இந்தியன்ஸ் என்ற ஒரு அணியை நீங்கள் பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்தீர்கள்.
ஒரு இரண்டு, மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால் அவர்கள் ஒன்றும் மோசமான அணியாக மாறிவிட மாட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு புதிய கேப்டன் கிடைத்திருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் எடுத்த முடிவாக தான் நான் பார்க்கிறேன்.
கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஹர்திக் பாண்டியா எப்படிப்பட்ட வீரர் என்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அவரும் உங்களைப் போல் ஒரு சாதாரண மனிதன் தான். அன்றைய நாள் முடிந்தவுடன் இரவில் அவர் தூங்க வேண்டும். எனவே நீங்கள் அதைப் பற்றி கொஞ்சம் யோசிங்கள் கொஞ்சம் அமைதி காணுங்கள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுரை வழங்கியுள்ள ரவி சாஸ்திரி, ஹர்திக் பாண்டியா தற்போது அமைதியாக இருக்க வேண்டும். சில விஷயங்களை அவர் காது கொடுத்துக் கேட்கக் கூடாது. அமைதியாக இருந்து கிரிக்கெட்டில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.
நீங்கள் ஒரு இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடினால் எல்லாம் மாறிவிடும். மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் போலே ஒரு பலமான அணிதான். அவர்கள் மூன்று நான்கு போட்டிகளை வெல்ல தொடங்கி விட்டார்கள் என்றால் தற்போது இருக்கும் எதிர்ப்பு எல்லாம் ஆதரவாக மாறிவிடும். நிச்சயம் காலம் மாறும் என்று ரவி சாஸ்திரி அறிவுரை கூறியிருக்கிறார்.