மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தற்போது இணையதளத்தில் கலக்கி வருகிறார். ரவி சாஸ்திரி கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டால் அதைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.
இன்றுவரை 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி சிக்ஸர் அடிக்கும் போது ரவி சாஸ்திரி என்ன சொன்னார் என்று ஆங்கிலம் தெரியாத ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்குமே தெரியும். அந்த அளவுக்கு ரவி சாஸ்திரி கிரிக்கெட் வர்ணனையில் பிரபலம்.

ஆனால் திடீரென்று கிரிக்கெட் வர்ணனையை விட்டு பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி சென்றார். இந்திய அணியில் விராட் கோலியுடன் ரவி சாஸ்திரி இணைந்து பல டெஸ்ட் தொடரை வென்றார்கள். இந்த நிலையில் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி தற்போது மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார்.
ரவி சாஸ்திரி எப்போதுமே தன்னுடைய வயதுக்கு மீறிய விளம்பரங்களில் நடிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருபவர். ஏற்கனவே பெண்களுடன் ஆபாசமாக பேசும் வகையில் பல விளம்பரங்களில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ரவி சாஸ்திரி தொடர்ந்து கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒரு புகைப்படத்தில் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, பெண்களே நீங்கள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஏனென்றால் இது நான் தான் என்று உங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் நான் கவர்ச்சியாகவும் குறும்பு செய்பவனாகவும் இருக்கின்றேன். ஏனென்றால் எனக்கு 60 வயதாகிவிட்டது என்றும் ரவி சாஸ்திரி பதவி விட்டுள்ளார்.
இதை அடுத்து ரவி சாஸ்திரியின் இந்த செயலுக்கு பல ரசிகர்களும் பல விதமான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். ரவி சாஸ்திரி மது அருந்தும் பழக்கம் உடையவர் என்று அனைவருக்குமே தெரியும். இதனால் அவர் மது போதையில் இப்படி பதிவிட்டு இருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இது விளம்பரத்திற்காக ரவி சாஸ்திரி செய்தது என்று தற்போது தெரியவந்துள்ளது. விளம்பரம் செய்வதற்காக இப்படி எல்லாம் எல்லை மீறி சமூக வலைதளத்தில் பதிவிடலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.