சென்னை : ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர் குறித்த அதிரடி கருத்துக்களை கூறி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டுக்கான ஒரு தொடர் தானா? என தான் சந்தேகமடைந்ததாக கூறி இருக்கிறார்.
அதே போல 2009இல் அவர் ஐபிஎல் தொடரில் அறிமுகமான போது அப்போதைய சிஎஸ்கே வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரே இருக்காது என கூறியதாகவும், ஆனால் இன்று ஐபிஎல் வெறும் கிரிக்கெட் தொடர் என்பதை தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்து இருப்பதாக அஸ்வின் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அஸ்வின் பேசுகையில், "சில சமயங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தானா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் பல சமயங்களில் விளையாட்டு பின்னே சென்று விடுகிறது. அது மிகவும் பெரியது. விளம்பர படப்பிடிப்புகளுக்காக நாங்கள் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறோம்! அந்த இடத்துக்கு ஐபிஎல் வந்துள்ளது." என்றார்.
மேலும், "ஐபிஎல்-க்கு நான் வரும் போது ஒரு இளைஞனாக, பெரிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் எப்படி இருக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. பல சீசன்கள் ஐபிஎல்லில் இருந்ததால், ஐபிஎல் மிகப்பெரியது என்று என்னால் சொல்ல முடியும்" என்றார் அஸ்வின்.
"ஐபிஎல்லில் இருக்கும் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கேயில் இருந்தபோது ஸ்காட் ஸ்டைரிஸுடன் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐபிஎல் ஆரம்ப சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் போது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் நீடிக்கும் என்று நினைக்கவில்லை என்று அவர் என்னிடம் கூறினார்." என்று ஸ்காட் ஸ்டைரிஸ் அன்று சொன்னதை நினைவு கூர்ந்தார் அஸ்வின்.