சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வருபவர் ஜடேஜா. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு ஜடேஜா கடைசி கட்டத்தில் விளையாடிய ஆட்டம் தான் காரணம்.
ஜடேஜா சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளங்குகிறார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்திய ஜடேஜா, சிஎஸ்கே வின் அடுத்த கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் கேப்டன் பதவியில் ஜடேஜாவுக்கு சரியாக செயல்பட முடியவில்லை. இவரது தலைமையில் சிஎஸ்கே அணி படுதோல்விகளை சந்தித்தது. இதனை அடுத்து ஜடேஜா அந்த பதவியில் இருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனாக மாறினார். இந்த நிலையில் தற்போது புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருப்பது ஜடேஜாவுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சரியாகவே விளையாடவில்லை. மேலும் பந்துவீச்சிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக ஜடேஜா வின் பேட்டிங் கடந்த ஐபிஎல் 2022-ம் ஆண்டிலிருந்து தடுமாறி வருகிறது. ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் தற்போது 133 என்ற அளவில் இருக்கிறது. ஜடேஜா கடந்த 25 இன்னிங்ஸில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் 26 ரன்கள் தான்.
மேலும் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக ஜடேஜா கடுமையாக தடுமாறி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் இருந்து கணக்கிட்டால், அவர் 77 பந்துகளை ஸ்பின்னர்களை எதிர்கொண்டு வெறும் 83 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். மேலும் விசாகப்பட்டினத்திற்கு எதிராக நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஜடேஜா கடுமையாக தடுமாறினார்.
தோனிக்கு கொஞ்சம் ஆதரவு கொடுத்திருந்தால் அன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கும். ஜடேஜாவின் பேட்டிங் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது சிஎஸ்கே அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் தொடர்ந்து சிஎஸ்கே அணி ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து வருகிறது. சிஎஸ்கே வைத்திருக்கும் நம்பிக்கையை ஜடேஜா காப்பாற்றுவாரா இல்லை கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இதே போல் தொடர்ந்து செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜடேஜாவின் இந்த பேட்டிங் குறை இந்திய டி20 அணியில் இடம் கிடைப்பதற்கும் ஆப்பு வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.