மும்பை : ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. பெரும்பான்மையான அணிகள் பத்து போட்டிகள் விளையாடிவிட்டது. இன்னும் சில லீக் ஆட்டம் தான் எஞ்சி இருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர இன்னும் யாரும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
ராஜஸ்தான் அணியே தொடர்ந்து தோல்விகளை தழுவினால் கூட புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது.

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல மற்ற அணிகளின் தயவு முக்கியம். ஒருவேளை இரு அணிகளும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு தான் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம், ஐபிஎல் லீக் சுற்று மே மாதம் 19ஆம் தேதி முடிவடைகிறது. பிளே ஆப் சுற்று 21ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால் இந்த இரு அணிகளிடமிருந்து டி20 உலக கோப்பைக்கு இடம் பெற்றுள்ள வீரர்கள் குறைந்தது நான்கைந்து நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் அமெரிக்காவுக்கு செல்ல நேரம் இருக்கும்.
இதுவே பிளே ஆப் சுற்றில் தகுதி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றால் இந்த அணிகளால் மே 27ஆம் தேதி இங்கிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு செல்லும் வகையில் சூழல் ஏற்படும். அதாவது எந்த ஓய்வும் இன்றி வெறும் 4 நாட்கள் இடைவெளியில் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டியது வரும். இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மும்பை ஆர் சி பி இருப்பது இந்திய அணிக்கு நல்லது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஏனென்றால் இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி,ரோகித் சர்மா, பும்ரா,சிராஜ், ஹர்திக் பாண்டியா,சூர்யகுமார் போன்ற முக்கிய வீரர்கள் இரு அணிகளில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஓய்வு கிடைப்பது இந்திய அணிக்கு நல்லது. இதனால் இந்த வீரர்கள் முன்பே அமெரிக்காவுக்கு சென்று அங்கு பயிற்சி செய்ய நேரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.