பெங்களூர் : 2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டை அணியில் இருந்து நீக்கியது.
அப்போது பெங்களூர் அணியின் முடிவு குறித்து கடும் விமர்சனம் வெளியானது. தற்சமயம் உலகிலேயே சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வரும் ஜோஷ் ஹேசல்வுட்டை அணியில் இருந்து நீக்கியது தவறான முடிவு. இவரை விட சிறந்த வேகப் பந்துவீச்சாளர் உங்களுக்கு கிடைத்து விடுவாரா? என பெங்களூர் அணியின் ரசிகர்களே கேள்வி எழுப்பினர்.
ஜோஷ் ஹேசல்வுட் 2024 ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட மாட்டார். சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்பது தெரிந்தே பெங்களூர் அணி அவரை நீக்கி இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. ஜோஷ் ஹேசல்வுட் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் முதல் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

அதனால், அப்போது முதல் சில வாரங்கள் அவர் கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் என்பதால் முதல் பாதி தொடரில் ஹேசல்வுட் பங்கேற்பது சந்தேகமே.
அவர் ஐபிஎல் தொடரின் பின் பாதியில் சில போட்டிகளில் மட்டும் ஆடினாலும் ஐபிஎல் விதிப்படி அவருக்கு அவரது ஏல விலையான 7.75 கோடியை கொடுக்க வேண்டும். அவர் ஆடாத முதல் சில போட்டிகளில் ஆட அவருக்கு இணையான வேகப் பந்துவீச்சாளரை கண்டுபிடித்து ஏலத்தில் வாங்க வேண்டும். அதனால், ஹேசல்வுட்டுக்கு கொடுக்க வேண்டிய அந்த 7.75 கோடி என்பது பெங்களூர் அணிக்கு இழப்பு தான். மாற்று வேகப் பந்துவீச்சாளரை ஏலத்தில் வாங்கவும் பணம் வேண்டும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டே உஷாராக ஜோஷ் ஹேசல்வுட் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இருந்தாலும் நீக்கி இருக்கிறது பெங்களூர் அணி. தற்போது ஹேசல்வுட் மீண்டும் தன் பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அடிப்படை விலையாக 2 கோடி என அவர் நிர்ணயம் செய்துள்ளார்.
அவர் சில போட்டிகளில் ஆட மாட்டார் என்பது தெரிந்தும் ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் வாங்குமா? என்பதே இப்போதைய கேள்வி. அவர் தன் முடிவை மாற்றி அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்க முன் வருவாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.