பெங்களூர் : பெங்களூரில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்த நிலையில், சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆனால் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் வைத்தோ வெற்றிபெற வேண்டும். அப்போது தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணிகளும் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகளில் மழை குறுக்கிடுவது வழக்கமாகி வருகிறது.
தற்போது பெங்களூரில் மழை பெய்ய 80 சதவிகித வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மழையால் ஆட்டம் ரத்தானால் சிஎஸ்கே அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.
இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் வானிலை மீதும் ஒரு கண் வைத்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரில் இன்று காலை முதலே மழை பெய்வதற்கான சுவரே இல்லாமல் நல்ல வெயில் அடித்து வருகிறது. இதனால் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளின் ரசிகர்கள், நிச்சயம் 20 ஓவர்களும் ஆட்டம் நடக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.
இருப்பினும் மாலை 4 மணியளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் நின்றால் கூட சின்னச்சாமி மைதானத்தில் சிறந்த வடிகால் பணிகள் செய்யப்பட்டிருப்பதால், போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.