பெங்களூர் : இம்பேக்ட் பிளேயர் விதியால் பவுலர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நட்சத்திர வீரர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இம்பேக்ட் பிளேயர் விதிகள் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய விதிகள் காரணமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை இரு அணிகளும் சேர்த்து விளையாட முடியும். இதனால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் கொடுப்பதை பற்றி கவலைப்படாமல் அதிரடியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதியால் பவுலர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். 65மீ பவுண்டரியை எளிதாக பேட்ஸ்மேன்களை விளாச முடிவதால், இந்த ஐபிஎல் தொடரில் பவுலர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது. இந்த விதிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முகேஷ் குமார், அக்சர் படேல் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்பான விவாதத்தில் ரோகித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன். ஆல்ரவுண்டர்களுக்கு போதுமான அளவில் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோல் பவுலர்கள் பலரும் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு உணர்வை நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை.
பவுலர்கள் பலரும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி அல்லது சிக்சருக்கு செல்லும் என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச தரத்திலான கிரிக்கெட் தொடரில், இப்படி ஒரு சார்புடன் இருக்க கூடாது. பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையிலான போட்டி தான் கிரிக்கெட்டின் அழகாக இருக்கிறது. அனைத்து அணியிலும் பும்ரா, ரஷீத் கான் போன்ற பவுலர்கள் இல்லை.
கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற காரணத்தினால் என்னால் பவர் பிளே ஓவர்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடிகிறது. ஏனென்றால் நம்பர் 8 வரை ஒரு தரமான பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று நன்றாக தெரியும். இதுதான் கிரிக்கெட்டின் சமநிலையை உடைப்பதாக கருதுகிறேன். என்னை போல் பலரும் நினைக்கிறார்கள். இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக எனக்கு இந்த விதி பிடிக்கிறது என்று சொல்வேன். ஆனால் ஒரு கிரிக்கெட் போட்டி என்பது பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிப்பது மட்டுமல்ல. அதுவும் சுவாரஸ்யத்தை கொடுக்கும் என்றாலும், 160 ரன்களை டிஃபெண்ட் செய்வதும் நிச்சயம் சுவாரஸ்யமாக தான் இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.