பெங்களூர் : நாட்டிலேயே சிறந்த வடிகால் அமைப்பை சின்னச்சாமி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நாளை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி வென்றால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதேபோல் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இருப்பினும் நாளை ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் மே 18 முதல் மே 21 வரை பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையன் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வானிலை தகவலால் குழப்பத்தில் உள்ளனர்.
ஆட்டம் நடக்கவில்லை என்றால், சிஎஸ்கே அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதனிடையே சின்னச்சாமி மைதானத்தில் நாட்டிலேயே சிறந்த வடிகால் அமைப்பு இருப்பதால், மழை பெய்தாலும் பிரச்சனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் எவ்வளவு மழை பெய்தாலும், போட்டி நடக்கும் போது மழை நின்றுவிட்டால், போட்டி நிச்சயம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு சப்-ஏர் சிஸ்டம்ஸ் நிறுவனம் மூலமாக வடிவால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் அமைப்பின் மூலமாக ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தரையில் இருந்து அகற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதும், சிறந்த வடிகால் அமைப்பு காரணமாக போட்டி முழுமையாக நடத்தப்பட்டது.
மழை நின்று 15 நிமிடங்களுக்குள் அனைத்து பகுதிகளில் இருந்து தண்ணீரை அகற்றும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு இதற்காக ரூ.4.25 கோடி செலவிட்டு, சுமார் 4.5 கிமீ அளவிற்கு பைப்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாகவே பெங்களூரில் மழை பெய்தாலும், போட்டிகள் நிச்சயம் நடக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.