பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பேச்சை கேட்காமல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டிஆர்எஸ் அப்பீலுக்கு சென்றது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சின்னச்சாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ரஜத் பட்டிதர் - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து அதிரடியை தொடர்ந்தது.
சிமர்ஜீத் சிங் வீசிய 14வது ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட, தீக்சனா வீசிய 15வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென ஷர்துல் தாக்கூரை அட்டாக்கில் வந்தார். அவர் வீசிய 2வது பந்து ரஜத் பட்டிதரின் கால்களை அடித்து சென்றது.
அப்போது ஷர்துல் தாக்கூர் நடுவரிடம் தீவிரமாக விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார். இதன்பின் டிஆர்எஸ் எடுக்க வேண்டும் என்று தோனியிடம் கோரினார். அதற்கு தோனி, ஷர்துல் தாக்கூரிடம் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்த, டிஆர்எஸ் டைமர் 4 நொடிகளுக்கு கீழ் வந்தது. இதனால் ஷர்துல் தாக்கூரின் பேச்சை கேட்டு கேப்டன் ருதுராஜ் உடனடியாக டிஆர்எஸ் அப்பீல் செய்தார்.
ஆனால் தோனி கடைசியில் அவுட் இல்லை என்று கையசைத்து சென்றார். இதன்பின் 3வது நடுவர் டிஆர்எஸ் பார்த்த போது, ஷர்துல் தாக்கூர் வீசிய பந்து தெளிவாக அவுட்சைட் ஆஃப் திசையில் பிட்சானது தெரிய வந்தது. தோனி இல்லையென்று கூறிய போதும், பவுலரின் பேச்சை கேட்டு ருதுராஜ் கெய்க்வாட் டிஆர்எஸ் செய்தது சொதப்பலில் முடிவடைந்தது. டிஆர்எஸ் என்பது தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில், தோனியின் பேச்சை கேட்காமல் ருதுராஜ் முடிவெடுத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.