பெங்களூர் : நாம் நேர்மையாக கடின உழைப்பை கொடுத்து விளையாடினால், அதற்காக கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருப்பார் என்று ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் தேதி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் இருந்தது. அப்போது ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ரசிகர்கள் சிலர் கால்குலேட்டரை பயன்படுத்தி ஒரு கணக்கை வெளியிட்டனர். அப்போது மும்பை, சிஎஸ்கே அணிகளின் ரசிகர்கள் ஆர்சிபியின் கால்குலேட்டரை கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் 15 நாட்களில் அந்த கால்குலேட்டர் கணக்கை சரியாக செயல்படுத்தியதோடு, கிண்டல் செய்வதவர்களுக்கும் விமர்சனத்தை கொடுத்துள்ளது ஆர்சிபி அணி. 8 போட்டிகளின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தது.
ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளுடன் விராட் கோலி பேசுகையில், சில நேரங்கள் நாம் வெற்றிபெற ஒரு சதவிகித வாய்ப்பே இருக்கும். ஆனால் வெற்றிக்கு அந்த சதவிகிதம் இருந்தாலே போதும் என்று ஊக்கமளிக்கும் வகையில் பேசி இருப்பார். தற்போது சொல்லோடு மட்டுமல்லாமல், செயலிலும் ஆர்சிபி அணியை நிரூபிக்க வைத்துள்ளார்.
ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல 0.2 சதவிகிதமே வாய்ப்புகள் இருந்த போதும், எந்தவித அச்சமும் இல்லாமல் ஆர்சிபி அணி மிரட்டியுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்களை விளாசி இருக்கிறார். ஒவ்வொரு பவுண்டரிக்கும், சிக்சருக்கும் உற்சாகமான விராட் கோலி, ஒவ்வொரு விக்கெட்டையும் வெற்றியை போல் கொண்டாடி தீர்த்தார்.
இந்த வெற்றி குறித்து விராட் கோலி பேசுகையில், நீங்கள் செய்யும் செயலுக்கு நேர்மையாக இருந்தாலே போதும்.. கடவுளிடம் ஒரு திட்டம் எப்போதும் இருக்கும். நாங்கள் நேர்மையாக விளையாடி கடின உழைப்பை கொடுத்துள்ளோம். அதன் பலனையும் அறுவடை செய்துள்ளோம். இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எந்த வார்த்தையும் கிடையாது. ஏனென்றால் அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.