பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி அபாயகரமான வீரராக இருப்பார் என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 11 பந்துகள் மீதமிருந்த சூழலில் வென்றாலோ பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இதனிடையே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் நாளை போட்டி நடக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சின்னச்சாமி மைதானத்தில் தோனியின் கடைசி போட்டி என்பதால், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் மஞ்சள் ஜெர்சியுடன் வர திட்டமிட்டுள்ளனர்.
இந்த சீசனில் தோனி 13 போட்டிகளில் விளையாடி 136 ரன்களை சேர்த்திருக்கிறார். கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பல சிக்சர்களை விளாசி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் வீரர் வருண் ஆரோன் பேசுகையில், எனக்கு தோனியின் ஆட்டமாக இருக்கும் என்று மனதில் தோன்றுகிறது. ஏனென்றால் இதுவரையிலான சிஎஸ்கே அணியின் பயணத்தை பார்க்கும் போது, தோனியின் ஆட்டத்திற்காக களம் அமைந்துள்ளது.
சின்னச்சாமி மைதானத்தில் விளையாடுவது தோனிக்கு மிகவும் பிடிக்கும். மறக்க முடியாத பல இன்னிங்ஸ்களை தோனி விளையாடி இருக்கிறார். அதில் உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் சிக்சராக பறக்கவிட்டு, 1 ரன்னில் தோல்வியடைந்த இன்னிங்ஸ் கண்முன் நிற்கிறது. ஒற்றை வீரராக நின்று 20 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்திருந்தார். சின்னச்சாமி மைதானத்தில் தோனி மிகவும் அபாயகரமான வீரர்.
தோனியின் காயத்தை பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் எவ்வளவு வலி இருந்தாலும், அணிக்காக பல இன்னிங்ஸ்களை விளையாடி இருக்கிறார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிரான சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை 9 போட்டிகளில் தோனி விளையாடி இருக்கிறார். அதில் 184.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 376 ரன்களை தோனி விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.