பெங்களூர் : பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் மழையால் நின்று போன ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் இருக்கின்றன. தற்போது பெங்களூரின் தென் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், இரவு 7.30 மணிக்கு திட்டமிட்டபடி ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் சிறந்த வடிகால் பணிகள் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் சின்னச்சாமி மைதானத்தில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம். 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
ஆனால் மழை அதிகரித்ததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2015ஆம் ஆண்டு ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் திடீரென பெய்த மழை காரணமாக ஆர்சிபி பேட்டிங் செய்யாமலேயே ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் 2015ஆம் ஆண்டு ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் பெய்த மழையால் ராஜஸ்தான் அணியால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் 2017ஆம் ஆண்டு ஆர்சிபி - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் 2019ஆம் ஆண்டு ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக 5 ஓவர்கள் ஆட்டமாக குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 63 ரன்கள் இலக்கை விரட்டிய போது, மீண்டும் 4வது ஓவரில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை சின்னச்சாமி மைதானத்தில் மழையால் 6 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டுக்கு பின் எந்த போட்டிகளும் மழையால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.