பெங்களூர் : ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சிங்கத்தின் கர்ஜனையுடன் தோனி கம்பேக் கொடுப்பார் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலமாக சிஎஸ்கே அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி, தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடி உள்ளதாக ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.

இந்த சீசனுடன் தோனி ஓய்வுபெறுவார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஏற்கனவே 42 வயதை எட்டிய நிலையில், ஜூலை மாதத்துடன் 43 வயதை எட்டிவிடுவார். இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி செயல்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுதான் தோனியின் கடைசி ஆட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, எனக்கு தெரிந்த வரை, இந்தப் போட்டியை தோனியின் கடைசி ஆட்டமாக நினைக்கவில்லை. தோல்விகளை சாதாரணமாக எடுத்து கொள்ளும் வீரர் அல்ல தோனி. நிச்சயம் சிங்கத்தின் கர்ஜனையை போல் தோனி மீண்டும் வருவார். இந்த சீசனில் கடைசி 4 முதல் 5 ஓவர்களில் பேட்டிங் செய்துள்ளார்.
அதற்கு தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயமே காரணமாக உள்ளது. அதனால் காயத்தை சரியாக கவனித்து, அதற்கேற்ப அணிக்கு பங்களிக்க வேண்டும் என்று தோனி அறிந்து வைத்திருக்கிறார். இதுபோல் சர்வதேச போட்டிகளிலும், சிஎஸ்கே அணிக்காகவும் தோனி ஏராளமான முறை விளையாடி இருக்கிறார். அணிக்காக எப்படி பங்களிக்க வேண்டும், எந்த வகையில் பங்களிக்கலாம் என்பதே தோனியின் எண்ணமாக இருக்கும்.
இன்னும் 1 அல்லது 2 சீசன்களில் தோனி சாதாரணமாக விளையாடலாம். ஏனென்றால் உடல் ரீதியாக தோனிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் சிஎஸ்கே அணிக்காக வெகு காலமாக தோனி ஃபினிஷிங் செய்திருக்கிறார். கடைசி 12 முதல் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொள்வதால், நிச்சயம் அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.