பெங்களூர் : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி ஆர்சிபி அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து ஓய்வறைக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி 201 ரன்கள் கூட எடுக்காததால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்தது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், முதல் பந்தில் தோனி சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் தோனி ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் ஓய்வறையில் அமர்ந்திருந்த தோனி சோகமாக காணப்பட்டார்.
இந்த போட்டிக்கு பின் ஆர்சிபி அணி வீரர்களுடன் கை குலுக்குவதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் வரிசையில் வந்தனர். அப்போது முதல் ஆளாக தோனி நின்றிருந்த நிலையில், ஆர்சிபி அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த தோனி, அருகில் ஓய்வறையில் நின்றிருந்த ஆர்சிபி அணியின் சக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுடன் கைகுலுக்கி சென்றார்.
சிஎஸ்கே அணி வீரர்களுடன் கைகுலுக்கிய விராட் கோலி, தோனியை சில வினாடிகள் தேடினார். ஆனால் அப்போது ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்காமல் தோனி ஓய்வறைக்கு சென்றது தெரிய வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி வீரர்களை சந்திக்க வரிசையில் நின்ற தோனி, ஏன் கடைசி நிமிடத்தில் மனம் மாறி ஓய்வறைக்கு சென்றார் என்பது புரியாத புதிராக உள்ளது.
தோனியின் செயலை ஆதரிக்கும் வகையில், ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தை தடுக்க வேண்டாம் என்று தோனி ஓய்வறைக்கு சென்றதாக சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் தோனியின் மீது ஆர்சிபி மற்றும் மற்ற அணிகளின் ரசிகர்கள் விமர்சனங்களை எறிந்து வருகின்றனர். கடைசி போட்டியில் தோல்வியடைந்ததால் இப்படி செய்யலாமா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.