பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் இருவரும் அமைதி காத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து விராட் கோலி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விராட் கோலி விளாச, திடீரென மழை பெய்ய தொடங்கியது.

பின்னர் 40 நிமிடங்களுக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், ஆர்சிபி அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் சிஎஸ்கே அணி ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வர, ஆர்சிபி அணி சிக்ஸ் அடிக்க முடியாமல் திணறியது. பின்னர் சான்ட்னர் பந்தில் சிக்ஸ் அடித்த விராட் கோலி, அடுத்த பந்திலேயே 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் டூ பிளசிஸ் அதிரடிக்கு திரும்பினார். ஜடேஜா வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது.
சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, சான்ட்னர் பவுலிங்கில் துரதிஷ்டவசமாக 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகினார். இதன்பின் ரஜத் பட்டிதர் - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. சிமர்ஜீத் சிங் வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட, ஆர்சிபி அணியின் ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 138 ரன்களாக இருந்தது. தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் வீசிய 16வது ஓவரில் 17 ரன்கள் அடிக்கப்பட்டது.
தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவரில் ரஜத் பட்டிதர் அபாரமாக 2 சிக்சர்களை விளாச, தாக்கூர் பவுலிங்கில் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேற, 19வது ஓவரிலேயே ஆர்சிபி அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கடைசி ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 16 ரன்கள் அடித்து வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.