பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் டூ பிளசிஸ் 39 பந்துகளில் 54 ரன்களும், விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்களும், ரஜத் பட்டிதர் 23 பந்துகளில் 41 ரன்களும் விளாசினர்.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி 219 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. அதேபோல் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற 201 ரன்கள் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 201 ரன்கள் எடுக்க முடியாமல் ஆல் அவுட்டானால், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் பெங்களூர் மைதானத்தில் அதிகபட்சமாக சேஸிங் செய்யப்பட்ட இலக்கே 186 ரன்கள் தான். இதனால் ஆர்சிபி அணி வெற்றிபெற வேண்டும் என்று தீவிரத்துடன் களமிறங்கியது. அதேபோல் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், டூ பிளசிஸ், விராட் கோலி ஆகியோர் இணைந்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் மேக்ஸ்வெல் முதல் ஓவரை வீச வந்தார். கடந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்ததால், ரச்சின் ரவீந்திராவை வீழ்த்துவதற்கான யுக்தியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் நடு பிட்சில் மேக்ஸ்வெல் வீசிய பந்தை ருதுராஜ் கெய்க்வாட் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் அடிக்க, அதனை எளிதாக யாஷ் தயாள் பிடித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகமடைந்தனர்.