பெங்களூர் : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 47 ரன்களை விளாசினார். இந்த இன்னிங்ஸில் விராட் கோலி ஒவ்வொரு பவுண்டரியின் போது, சிக்சரின் போதும் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

தொடக்கம் முதலே விராட் கோலி ஆக்ரோஷம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்குள் சிஎஸ்கே அணியை கட்டுப்படுத்த வேண்டிய தேவையுடன் ஆர்சிபி அணி களமிறங்கியது.
இதன் காரணமாக சிஎஸ்கே அணி பேட்டிங்கின் போது தொடக்கம் முதலே விராட் கோலி ஆக்ரோஷமாக காணப்பட்டார். ரஹானே விக்கெட்டை வீழ்த்திய போது, சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து வாயில் கை வைத்து சைலன்ஸ் என்று காட்டினார். இதனைத் தொடர்ந்து நடுவர் அக்ஷய் உடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
12வது ஓவரை வீச வந்த ஃபெர்குசன் அந்த ஓவரின் 2வது பந்தை வீசிய போது கை நழுவியது. இதனால் அந்த பந்து ரச்சின் ரவீந்திராவின் தலைக்கு செல்ல, அதனை அவர் பவுண்டரியாக மாற்றினார். இதன்பின் நடுவர் உடனடியாக நோ-பால் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விராட் கோலி உடனடியாக நடுவர் அக்ஷய் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விராட் கோலியை தொடர்ந்து கேப்டன் டூ பிளசிஸ் மற்றும் ஃபெர்குசன் இருவரும் நடுவரை சுற்றி வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் நடுவர் அக்ஷய் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. ஏற்கனவே நடுவர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.