பெங்களூர் : ஆர்சிபி வீரர்களுடன் கை குலுக்காமல் தோனி ஓய்வறை திரும்பியதை அறிந்து, அவரை சந்திக்க விராட் கோலி சிஎஸ்கே அணியின் ஓய்வறைக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. அதேபோல் சிஎஸ்கே அணியை 191 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியால் உற்சாகமடைந்த ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடைசி ஓவரில் ஆட்டத்தை முடிக்காமல் சோகத்தில் இருந்த தோனி, ஆட்டம் முடிந்த பின் ஆர்சிபி வீரர்களுடன் கை குலுக்க தயாராகினார். ஆனால் ஆர்சிபி வீரர்களின் கொண்டாட்டத்தை பார்த்த தோனி, ஓய்வறையில் இருந்த ஆர்சிபி பயிற்சியாளர்களுடன் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஓய்வறைக்கு திரும்பினார்.
இது மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி யாருடனும் இப்படி நடந்து கொண்டதில்லை. இதன்பின் மற்ற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆர்சிபி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தனர்.
இதன்பின் தோனியை தேடி விராட் கோலி ஓய்வறைக்கு சென்றது தெரிய வந்துள்ளது. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பின் தோனியை தேடி ஓய்வறைக்கு சென்ற விராட் கோலி, மாஹி பாய் எங்கே? என்று அருகில் இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார். சிஎஸ்கே அணியின் ஓய்வறைக்கே சென்று தோனியை விராட் கோலி சந்தித்துள்ளார்.
போட்டியின் போது விராட் கோலி ஆக்ரோஷம் எல்லை மீறியதாக சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக தோனியின் கடைசி போட்டியில் கூட அவரின் விக்கெட்டை வீழ்த்திய பின் ஆர்சிபி வீரர்கள் தீவிரமாக கொண்டாடினர். இதனால் விராட் கோலியை சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்த நிலையில், தோனியை காண்பதற்காக விராட் கோலி ஓய்வறைக்கு சென்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.