பெங்களூர் : சிஎஸ்கே அணியின் ரசிகர்களை பார்த்து ஆர்சிபி அணியின் விராட் கோலி வாயில் வைத்து "சைலன்ஸ்" சைகை காட்டியுள்ளார்.
ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை நேரில் பார்க்க சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் சின்னச்சாமி மைதானத்தில் உள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய டூ பிளசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் விளாசினர்.

இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் டேரல் மிட்சல் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 2.2. ஓவர்களுக்கு 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது. தேவைக்கேற்ப அதிரடியும் டாட் பால்களை கொடுக்காமல் இருவரும் ரன்களை சேர்த்தனர். இதனால் சிஎஸ்கே அணி 6 ஓவர்கள் முடிவில் 58 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் ரஹானே கியரை அதிரடிக்கு திருப்பிய நிலையில், ஃபெர்குசன் வீசிய பந்தில் ரஹானே 22 பந்துகளில் 33 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
ரச்சின் ரவீந்திரா - ரஹானே இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் சிஎஸ்கே அணியின் கைகள் ஓங்கியிருந்த போது, சின்னச்சாமி மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் கோஷம் அதிர வைத்தது. அப்போது சரியான நேரத்தில் ரஹானே ஆட்டமிழந்ததால், உற்சாகமான விராட் கோலி சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து வாயில் கை வைத்து சைலன்ஸ் என்று சைகை காட்டினார்.
கடந்த சீசனின் போது ஆர்சிபி ரசிகர்களை பார்த்து கவுதம் கம்பீர் சைலன்ஸ் என்று சைகை செய்த போது விராட் கோலி கோபமடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லக்னோ மைதானத்திற்கு சென்று அந்த ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்று பதிலடி கொடுத்தார். ஆனால் இம்முறை விராட் கோலி தேவையின்றி சிஎஸ்கே ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.