RCB vs CSK : மழையால் 5 ஓவர்கள் ஆட்டமாக நடந்தால்.. சிஎஸ்கே இலக்கு என்ன? ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?
பெங்களூர் : சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு போட்டி மழை காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மும்பை - கேகேஆர் போட்டி, குஜராத் - கேகேஆர் ஆட்டம், ஐதராபாத் - குஜராத் ஆகிய ஆட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன. இதனால் புள்ளிப்பட்டியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மே 18ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் சுமார் 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அதேபோல் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வென்றாலோ ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணி ரசிகர்களும் போட்டி நடக்க வேண்டும் என்று வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் மே 18ஆம் தேதி மழை காரணமாக ஆட்டம் 5 ஓவர்களாக நடத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் டிஆர்எஸ் விதியின் கீழ் என்ன இலக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆர்சிபி அணி முதல் பேட்டிங் ஆடும் பட்சத்தில், உதாரணமாக 80 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டால், சிஎஸ்கே அணியை 62 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால், சிஎஸ்கே அணியின் ரன் ரேட்டை 0.448 ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் 0.450 ஆகவும் இருக்கும். இதனால் ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
ஒருவேளை சிஎஸ்கே அணி முதல் பேட்டிங் ஆடி 81 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், அதனை ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும். அப்படி சேஸிங் செய்தால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் 0.451ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் 0.459 ஆகவும் இருக்கும். ஆனால் ஒரு பந்து தவறினாலோ அல்லது ஒரு ரன்னை கூடுதலாக விட்டுக் கொடுத்தாலோ சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications