பெங்களூர் : பெங்களூரில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், சிஎஸ்கே vs ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி உட்பட 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் 7 தோல்வி, 6 வெற்றி உட்பட 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தினால், 16 புள்ளிகளுடன் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகளை மீதம் வைத்தோ ஆர்சிபி அணி வீழ்த்தினால், பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க முடியும். கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியாக அமைந்துள்ளது.
இதனால் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இந்த போட்டியை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் மே 18ஆம் தேதி பெங்களூரில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை 80 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மழை பெய்யுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மழை பெய்தால் எந்த அணிக்கு சாதகம் என்று தெரிய வந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் +0.528 ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் +0.387 ஆகவும் உள்ளது. இதனால் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலை உள்ளது.
ஆனால் மழை காரணமாக ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் ஆர்சிபி அணிக்கு சாதகம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மழை பெய்தால் வெற்றி, தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11 முறை டாஸை இழந்துள்ளதால், ஆர்சிபி அணிக்கு சாதகமாக சூழல் உள்ளது.