சென்னை : தோனியை வைத்து சிஎஸ்கே அணியின் பலவீனத்தை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மறைத்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில், வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே. இதற்கு ருதுராஜ் கெய்க்வாட்-ன் மோசமான கேப்டன்சியே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சில சிஎஸ்கே ரசிகர்கள் கேப்டன்சியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாடை நீக்க வேண்டும் என்று குரல்கள் கொடுத்து வருகின்றனர். முக்கியமான போட்டியில் டக் அவுட்டானதோடு, பவுலிங் மாற்றங்களிலும் ருதுராஜ் ஏராளமான முறை சொதப்பியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் தவறுகளை கூட ஒப்புக் கொள்ளாமல் வீரர்களை காயங்களை தோல்விக்கு காரணமாக கூறுவதாக பேசி வருகின்றனர்.
2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற அணியில் கான்வே, ராயுடு, தீபக் சஹர், பதிரானா, மொயின் அலி ஆகியோர் இருந்தனர். இதில் ராயுடு ஓய்வை அறிவித்த பின் அவரது இடத்திற்கு மிட்சல் கொண்டு வரப்பட்டார். ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான கான்வே, முஸ்தஃபிசுர் ரஹ்மான், பதிரானா, தீபக் சஹர், மொயின் அலி என்று ஒருவர் மாற்றி ஒருவராக விலகி வந்தனர்.
கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் பாதி வீரர்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட் தள்ளப்பட்டார். சிஎஸ்கே அணியில் இருந்த இந்த ஓட்டைகள் தோனியின் பெயரையும், ருதுராஜ் கெய்க்வாட்-ன் பேட்டிங் ஃபார்மையும் வைத்து மறைக்கப்பட்டு வந்தது. ஒரே சீசனில் 6 வீரர்களை மாற்றிவிட்டு வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல.
அதேபோல் சர்வதேச அனுபவம் இல்லாத ருதுராஜ் கெய்க்வாட் டாஸிலும் அதிர்ஷ்டமில்லாமல் இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ கேப்டன்சியில் இருந்து நீக்கக் கூடாது என்றே பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனுக்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் கூடுதல் பலத்துடனும், யுக்திகளுடனும் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.