பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது. டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் 3 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து டெல்லி அணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி, கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாமல் விளையாட உள்ளது. இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்படுவார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டு வந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஏராளமான அனுபவம் கொண்டவர். போட்டியின் சூழலையும், என்ன செய்ய வேண்டும் என்றும் எளிதாக புரிந்து கொள்பவர் அக்சர் படேல். அதனால் அவரின் தலைமையில் டெல்லி அணி விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
2 நாட்களுக்கு முன்பாகவே ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு இருக்கிறதா அல்லது தடை செய்யப்படுவாரா என்ற ஆலோசனை நடத்தினோம். அதனால் அக்சர் படேலை தயார் செய்ய தொடங்கிவிட்டோம். ஏற்கனவே பவுலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன்பின் நாளைய ஆட்டத்திற்கான திட்டங்களை அறிந்து கொள்வார் என்று தெரிவித்தார்.
ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக எந்த பேட்ஸ்மேன் களமிறக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே குமார் குசாக்ராவுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.