பெங்களூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 148 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. குஜராத் அணிக்கு இந்த போட்டி வாழ்வா, சாவா போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

அதேபோல் ஆர்சிபி அணி தரப்பில் ஸ்வப்னில் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே சேர்க்கப்பட, 2வது ஓவரை வீச சிராஜ் வந்தார். இந்த ஓவரில் அட்டாக் செய்ய வேண்டிய நிலையில் இருந்த சாஹா வெறும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 4வது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் குஜராத் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சாய் சுதர்சன் - ஷாரூக் கான் கூட்டணி இணைந்தது. இருவரும் குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கேமரூன் க்ரீன் வீசிய ஷார்ட் பாலில் சாய் சுதர்சன் 6 ரன்களில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் சாய் சுதர்சன் முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடர்ந்து மில்லர் - ஷாரூக் கான் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கரண் சர்மா பவுலிங்கில் மில்லர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஷாரூக் கானும் விராட் கோலியின் அற்புதமான ஃபீல்டிங்கால் 37 ரன்களில் ரன் அவுட்டாக, ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது.
இதனால் 15 ஓவர்களில் குஜராத் அணியின் ஸ்கோர் 102 ரன்களாக இருந்தது. தொடர்ந்து கரண் சர்மா வீசிய 16வது ஓவரில் ராகுல் டிவாட்டியா 19 ரன்கள் சேர்க்க, 17வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் ரஷித் கான் 18 ரன்களிலும், ராகுல் டிவாட்டியா 35 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கடைசி ஓவரின் முதல் பந்தில் மானவ் சுதார் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 2வது பந்தில் மோகித் சர்மா ரன் அவுட்டானார்.
தொடர்ந்து 3வது பந்தில் விஜய் சங்கர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி அணி டீம் ஹாட்ரிக்கை வீழ்த்தியது. இதன் காரணமாக குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.