பெங்களூர் : குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரின் விக்கெட்டையும் ஆர்சிபி அணியின் சிராஜ் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால், குஜராத் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். சின்னச்சாமி மைதானம் அளவில் சிறியது என்பதால், பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் பிட்சில் கொஞ்சம் புற்கள் இருந்ததால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் கடந்த போட்டிகளை போல் மீண்டும் ஸ்பின்னரை வைத்தே ஆர்சிபி அணி தொடங்கியது. முதல் ஓவரை வீச ஸ்வப்னில் சிங் அழைக்கப்பட்ட நிலையில், குஜராத் அணிக்கு சாஹா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீச சிராஜ் வந்தார். இந்த ஓவரின் 3வது பந்தில் சாஹா கட் அடிக்க முயன்று எட்ஜாகி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச்சானார். இதனால் 1 ரன்னில் சாஹா நடையை கட்டினார். இதன் மூலமாக சாஹாவை 4வது முறையாக சிராஜ் வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் மீண்டும் 4வது ஓவரை வீச சிராஜ் வந்தார். பவர் பிளே ஓவர்களில் அட்டாக் செய்யாமல் குஜராத் அணி திணறிய நிலையில், சுப்மன் கில் பவுண்டரி விளாச முயன்று பேட்டை சுழற்றினார். ஆனால் சுப்மன் கில் அடித்த பந்து நேராக விஜய்குமார் கைகளில் கேட்ச்சானது. இதனால் கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் குஜராத் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சில நாட்களுக்கு முன் சரியாக பவுலிங் செய்யவில்லை என்று சிராஜை ஆர்சிபி அணி பெஞ்ச் செய்தது. ஆனால் சிராஜ் கம்பேக் கொடுத்த பின் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தரமான பவுலிங்கை வீசியுள்ளார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களிலேயே எதிரணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்துவதை சிராஜ் வழக்கமாக்கியுள்ளார். இதற்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைத்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.