பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கேப்டன் டூ பிளசிஸ் படைத்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 2 சாதனைகளை படைத்துள்ளார். விராட் கோலி முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்க, மறுபக்கம் டூ பிளசிஸ் 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினார். தொடர்ந்து மானவ் சுதார் பவுலிங்கிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க, மோகித் சர்மா பவுலிங் செய்த 4வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
இதன் மூலமாக 18 பந்துகளில் அரைசதம் அடித்த டூ பிளசிஸ், ஆர்சிபி அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடிக்க 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன் புனே அணிக்கு எதிராக கிறிஸ் கெய்க் 17 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல் சிறப்பாக விளையாடிய டூ பிளசிஸ் 23 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 64 ரன்களை விளாசினார்.
இதன் மூலமாக ஆர்சிபி அணிக்காக பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக பவர் பிளே ஓவர்களுக்கும் கிறிஸ் கெய்ல் 50 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 64 ரன்கள் சேர்த்து டூ பிளசிஸ் முறியடித்துள்ளார். இதன் மூலம் ஆர்சிபி அணி குஜராத் அணியை வீழ்த்த முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளார்.