பெங்களூர் : பவர் பிளே ஓவர்களுக்கு பின் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது பதற்றத்தை கொடுத்ததாக ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ஆர்சிபி அணி பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 போட்டிகளில் 7 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த 3 போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றிபெறும் பட்சத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் வென்ற பின் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், கடந்த சில போட்டிகளாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன். அதேபோல் ஃபீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வருகிறோம். இந்த பிட்ச் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. வழக்கத்திற்கு மாறாக கூடுதல் பவுன்ஸ் இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் சில கேட்ச்களை மிஸ் செய்தோம். ஆனால் முயற்சி முழுமையாக இருந்ததை தான் பார்க்க வேண்டும். இந்த மைதானத்தில் நாங்கள் ஆடிய ஆட்டம் அனைத்தும் அதிக ரன்கள் சேர்க்கப்பட்ட போட்டியாகவே இருந்தது. 180 முதல் 190 ரன்கள் என்பதே சராசரி ரன்களாக இருந்தது. ஆனால் இன்றைய ஆட்டம் அப்படியில்லை. சேஸிங் செய்ய களமிறங்கிய போது நாங்கள் ஸ்கோரை பார்க்கவே இல்லை.
வழக்கம் போல் களமிறங்கி எப்படி விளையாடுவோமோ, அப்படியே விளையாடினோம். பவர் பிளே ஓவர்களுக்கு பின் திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நிச்சயம் அது சரியாக செயல்பாடு அல்ல. நெட் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக விரைவாக இலக்கை எட்ட வேண்டும் என்பது திட்டத்தில் இருந்தது தான். ஆனால் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த பின், கொஞ்சம் நிதானமாக விளையாடியதாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.