பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை எந்த கோப்பையும் வெல்லாத போதும் எல்லாவற்றையும் வென்று விட்டதாக நினைத்துக் கொண்டு தெனாவெட்டான மனப்பான்மையுடன் இருப்பதாக கவுதம் கம்பீர் அதிரடியாக பேசி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது. இந்த இரண்டு அணிகள் எப்போது மோதினாலும் ஒரு பரபரப்பு எழும். இதற்கு முன் பலமுறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றுள்ளது.

இப்படி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே பகை இருக்கும் நிலையில், பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் கடந்த 11 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பகை உள்ளது. கடந்த 2023 ஐபிஎல் தொடரில் இருவரும் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு சென்றனர்.
அதனால், இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டிக்கு முன் ஐபிஎல் களம் சூடாக இருந்த நிலையில், கவுதம் கம்பீர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நேரடியாகவும், அந்த அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் விராட் கோலியை மறைமுகமாகவும் தாக்கிப் பேசி இருக்கிறார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசியது - "ஒரு அணியை எப்போதும் வீழ்த்த வேண்டும், என் கனவில் கூட வீழ்த்த வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். ஐபிஎல் அணிகளிலேயே இரண்டாவது பெரிய (பணக்கார) அணி. ஆடம்பரமான அணி உரிமையாளரை (விஜய் மல்லையா) கொண்ட அணி. அவர்கள் அணியிலும் பெரிய வீரர்கள் இருந்தனர். கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ். ஆனால், உண்மையில் அவர்கள் எதையும் ஜெயிக்கவில்லை. ஆனால், எல்லாவற்றையும் வென்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தெனாவெட்டான மனப்பான்மையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை."
"கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த மூன்று வெற்றிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. 2008இல் முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பிரெண்டன் மெக்குல்லம் இந்த அணியை வீழ்த்தினார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 49 ரன்னுக்கு ஆல் - அவுட் செய்தோம். அதன் பின்னர் 6 ஓவரில் 100 ரன்கள் அடித்தோம்" என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், விராட் கோலியையும் சீண்டும் வகையில் பேசி இருக்கிறார் கவுதம் கம்பீர்.