பெங்களூர் : ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்சை சுனில் நரைன் தவறவிட்டதால், கேகேஆர் அணியின் இளம் வீரர் ஹர்திக் ராணா தலையில் அடித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதல் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை விளாசி அசத்தினார்.

ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது கொல்கத்தா வீரர்களின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 4 கேட்ச்களை ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கோட்டைவிட்டனர். சுனில் நரைன் பவுலிங்கில் ஆர்சிபி அணியின் மேக்ஸ்வெல் அடித்த பந்து டீப் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த ரமன்தீப் சிங் கைகளில் சென்று விழுந்தது. எளிய கேட்சை கூட பிடிக்க முடியாமல் ரமன்தீப் சிங் கோட்டைவிட்டார்.
தொடர்ந்து ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரின் 4வது பந்தை கொஞ்சம் ஸ்லோ கட்டராக வீசினார். அதனை சிக்சர் அடிக்க மேக்ஸ்வெல் முயன்ற போது, அது எட்ஜாகி ஷார்ட் தேர்ட் மேன் திசைக்கு பறந்தது. சரியாக அதே இடத்தில் சுனில் நரைன் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். எளிய கேட்சை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தவறவிட்டார்.
அதனை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த ஹர்சித் ராணா, அதிருப்தியில் கைகளால் தலையில் அடித்து கொண்டிருந்தார். இதனை பெவிலியனில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த கவுதம் கம்பீர் கோபமடைந்தது வெளிப்படையாக தெரிந்தது. கடந்த போட்டியில் மட்டும் 2 எளிய கேட்ச்களை கேகேஆர் அணி வீரர்கள் தவறவிட்ட நிலையில், இந்த போட்டியில் 4 கேட்ச்களை கோட்டைவிட்டனர்.
2 போட்டிகளில் கொல்கத்தா 6 கேட்ச்களை தவறவிட்டது அந்த அணி பவுலர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரூ.24.75 கோடி கொடுத்து பவுலரை வாங்கியதை விடவும், நல்ல ஃபீல்டிங் பயிற்சியாளரை கேகேஆர் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.