பெங்களூர் : ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். ஆனால், அவர் இந்த ஆண்டு இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அது மட்டுமின்றி மிக அதிக அளவில் ரன்களை வாரிக் கொடுத்து இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நீண்ட காலத்துக்கு பின் ஆலோசகராக இணைந்த கவுதம் கம்பீர் 2024 ஐபிஎல் ஏலத்தின் போது மிட்செல் ஸ்டார்க்கை வாங்க கண்ணை மூடிக் கொண்டு விலை கேட்டார். இறுதியில் 24.75 கோடி என்ற விலைக்கு மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அவரை விட சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ராவுக்கு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 கோடி தான் சம்பளம் அளித்து வருகிறது. இந்த நிலையில் பும்ராவை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுப்பது நியாயமே இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.
இதை அடுத்து 24.75 கோடி சம்பளம் வாங்கும் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுவார் என பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தனர். இந்த நிலையில் அவர் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் 53 மற்றும் 47 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதாவது மொத்தம் 8 ஓவர்கள் வீசி 100 ரன்கள் கொடுத்துள்ளார்.
விக்கெட்டும் வீழ்த்தாமல், ரன்களையும் கட்டுப்படுத்த முடியாமல் மிட்செல் ஸ்டார்க் திணறி வருவது தெளிவாக தெரியத் தொடங்கி இருக்கிறது. அவரது சம்பளத்தை ஒவ்வொரு லீக் போட்டிக்கும் கணக்கிட்டால் ஒரு போட்டிக்கு சுமார் 1.76 கோடி சம்பளம் பெறுகிறார் மிட்செல் ஸ்டார்க். தற்போது இரண்டு போட்டிகளில் 3.52 கோடி சம்பளம் பெற்று ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் கொல்கத்தா அணியின் சம்பளத்தை வீணடித்து இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது கவுதம் கம்பீர் செய்த தவறு எனவும் கூறி புலம்பி வருகின்றனர்.