பெங்களூர் : கேகேஆர் அணியில் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் பவர் பிளே ஓவர்களிலேயே எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்துவிட்டதாக ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்/
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களையும், சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 19வது முறையாக கேகேஆர் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த 9 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்ற நிலையில், முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடிய ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், முதல் இன்னிங்ஸில் இந்த விக்கெட்டை கொஞ்சம் ஸ்லோயர் ஒன்றாக இருக்கும் என்று நினைத்தோம். கேகேஆர் அணி பவுலர்கள் கட்டர் பந்துகளை வீசிய போது, எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் அதிகமான கஷ்டப்பட்டார்கள். 182 என்ற ஸ்கோரை வைத்து வெற்றிபெற முடியும் என்றே நினைத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவிலான பனிப்பொழிவு வந்தது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலியே பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக உணர்ந்தார்.
பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலும் திட்டமிட்டே களமிறங்குவோம். சில விஷயங்களை தான் பவர் பிளே திட்டங்களில் மாற்ற முடியும். ஆனால் பவர் பிளே ஓவர்களுக்குள் ஆட்டத்தையே சால்ட் மற்றும் நரைன் இருவரும் மாற்றிவிட்டார்கள். இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஷாட்கள் அத்தனையும் தரமாக இருந்ததோடு, பவுலர்களின் மன உறுதியையும் கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டது என்று சொல்லலாம். நரைன் இருக்கும் போது ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்ய கூடாது. இருவருமே முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார்கள்.
அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் க்ரீன் ஆகியோரை வைத்து ஸ்பின் மற்றும் மீடியம் ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணியை முயற்சித்தோம். ஆனால் கேகேஆர் அணியில் சரியாக இடதுகை மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்கள் என்ற கூட்டணியுடன் வந்துள்ளார்கள். வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் செய்யும் போது லெக் ஸ்பின்னரிடம் கொடுத்தால், அவரால் எளிதாக பவுண்டரி அடிக்க முடியும். அதனால் இரு திசைகளிலும் ஸ்பின் செய்யும் வகையில் பவுலர்கள் தேவையாக இருந்தனர். ஆனால் அப்படியொரு ஸ்பின்னர் ஆர்சிபி அணியில் இல்லை.
நாங்கள் முதல் கரன் சர்மாவை தான் இம்பேக்ட் பிளேயராக களமிறக்க நினைத்தோம். ஆனால் கேகேஆர் அணி ஸ்லோயர் பால்களை சிறப்பாக கையாண்டதால், வைஷாக் விஜயகுமாரை கொண்டு வந்தோம். ஏனென்றால் ரஸ்ஸல் 80 சதவிகித பந்துகளை கட்டர்ஸ் மற்றும் ஸ்லோயர் பந்துகளாகவே வீசினார். அதில் இருந்து கற்று கொண்டு சிலவற்றை முயற்சித்தோம். அதேபோல் வைஷாக் விஜயகுமார் தான் இன்று எங்களின் சிறந்த பவுலராகவும் அமைந்தார் என்று தெரிவித்துள்ளார்.