பெங்களூர் : ஆர்சிபி அணியின் இளம் பந்துவீச்சாளர் விஜய்குமார் வைஷாக் பவுலிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 83 ரன்களை சேர்த்தார். கடைசி நேரத்தில் வந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்களை விளாசி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களும், சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கேகேஆர் அணி அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பவுலர்களின் செயல்பாடுகளே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முக்கிய பவுலர்களான முகமது சிராஜ் 3 ஓவர்களில் 46 ரன்களையும், யாஷ் தயாள் 4 ஓவர்களில் 46 ரன்களையும், அல்ஜாரி ஜோசப் 2 ஓவர்களில் 34 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
ஆனால் இம்பேக்ட் பிளேயராக வந்த விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஸ்லோயர் பந்துகளும், கட்டர் பந்துகளும் கேகேஆர் அணிக்கு பிரச்சனையை கொடுத்தது. ரஸ்ஸலை பின்பற்றி வைஷாக் வீசிய பவுலிங்கில் சின்னச்சாமி மைதானத்தில் சரியாக எடுபட்டது.
இந்த நிலையில் விஜய்குமார் வைஷாக் குறித்து அஸ்வின் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அதில், அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியை நேரில் பார்த்தேன். சேப்பாக்கம் மைதானம் கொஞ்சம் பிளாட் பிட்சாக இருந்தாலும், நல்ல பவுன்ஸ் இருந்தது. அப்போது கர்நாடகா அணிக்காக ஆடிய வைஷாக் விஜய்குமார் மிரட்டலாக பவுலிங் செய்தார்.
உயிரை கொடுத்து விளையாடும் வீரராக தெரிகிறார். 4 நாட்களும் அப்படியொரு பவுலிங் விஜய்குமார் வெளிப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் கேபிஎல் லீக்கிலும் அசத்தி இருக்கிறார். அனுபவமில்லை என்றாலும் ஆர்சிபி அணிக்காக அவர் நன்றாக செயல்படுவார் என்று தோன்றுவதாக தெரிவித்துள்ளார். அஸ்வின் கூறியதை போலவே முதல் போட்டியிலேயே வைஷாக் விஜய்குமார் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.