பெங்களூர் : 2015ஆம் ஆண்டுக்கு பின் பெங்களூர் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக கேகேஆர் அணி ஒருமுறை தோல்வியடையவில்லை என்பது பெங்களூர் அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே, மும்பை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கு சொந்த மைதானங்கள் தான் பலம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 7 போட்டியை சொந்த மண்ணில் விளையாடுவார்கள். அந்த 7 போட்டியில் வென்றாலே, கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடலாம். ஆனால் ஆர்சிபி அணியை பொறுத்தவரை சொந்த மைதானம் என்றாலே பிரச்சனை தான்.

இதுவரை பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றிகளை விட அதிகமாக தோல்விகளை தான் சந்தித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி பெங்களூர் மைதானத்தில் களமிறங்கவுள்ளது.
கடந்த முறை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. பெங்களூர் மைதானத்தில் கவுதம் கம்பீர் செய்த சேட்டைக்கு விராட் கோலி லக்னோ மைதானத்தில் வேறு லெவலில் பதிலடி கொடுத்தார். இறுதியாக கவுதம் கம்பீர் - விராட் கோலி இருவரும் நேரடியாகவே மோதிக் கொண்டனர்.
இதனால் மீண்டும் இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் மோதவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதிய போட்டிகளில் 18 முறை கேகேஆர் அணியும், 14 முறை ஆர்சிபி அணியும் வென்றுள்ளன. அதேபோல் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் ஒருமுறை கூட கேகேஆர் அணியை வீழ்த்தியதில்லை. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இருப்பினும் கடந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடி வரலாற்றை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மைதானம் கடந்த போட்டியில் கொஞ்சம் ஸ்லோவாக மாறியதால், இந்த போட்டியில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாமல் உள்ளது. இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.