பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வெற்றிபெற 183 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே விராட் கோலி பவுண்டரி அடித்து வரவேற்க, அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டது.

தொடர்ந்து ஹர்சித் ராணா வீசிய 2வது ஓவரில் அதிரடியாக சிக்ஸ் அடித்த டூ பிளசிஸ், அடுத்த பந்திலேயே 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் விராட் கோலி - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து பொளந்து கட்டியது. மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 17 ரன்கள் விளாசப்பட, சுனில் நரைன் ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 61 ரன்கள் சேர்த்திருந்தது.
ஆனால் இதன்பின் ஆர்சிபி அணியின் அதிரடியை கேகேஆர் அணி கட்டுப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 11 ஓவர்களில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தில் கேகேஆர் அணியின் கைகள் ஓங்குவதை உணர்ந்த மேக்ஸ்வெல் - விராட் கோலி மீண்டும் அதிரடிக்கு திரும்பினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 36 பந்துகளில் அரைசதம் அடிக்க, வருண் சக்கரவர்த்தி வீசிய 12வது ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது.
அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி அடிக்கப்பட, நரைன் பவுலிங்கில் மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த ரஜத் பட்டிதர் 3 ரன்களிலும், இளம் வீரர் அனுஜ் ராவத் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி 18 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை சேர்த்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி சிறப்பாக ஃபினிஷ் செய்யும் பொறுப்பு விராட் கோலி - தினேஷ் கார்த்திக் கூட்டணியின் கைகளில் வழங்கப்பட்டது. 19வது ஓவரை வீசிய ரஸ்ஸல் பவுலிங்கில் தினேஷ் கார்த்திக் அபாரமாக 2 சிக்சர்களை விளாசி அசத்தினார்.
இதன்பின் கடைசி ஓவரை வீச மிட்சல் ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரின் 2, 6, 1, 6, 1 மற்றும் கடைசி பந்தில் ரன் அவுட் என்று 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்களும், தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.